×

நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்: 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சத்தில் நலத்திட்ட உதவி

 

நாகப்பட்டினம், ஜூன் 2: நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.96லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர்ஆகாஷ் தலைமையில் நடைந்தது.இக்கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 330 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 5 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 மதிப்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 1 ஆயிரத்து 800 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் என 7 நபர்களுக்கு மொத்தம் ரூ.7 லட்சத்து 96 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரங்கநாதன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Nagapattinam ,Public Grievance Redressal Day ,Nagapattinam Collectorate ,Collector ,Akash ,
× RELATED ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து...