திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது கலெக்டராக பொறுப்பேற்பு; மக்களின் நியாயமான கோரிக்கைகளை காலதாமதம் இன்றி நிறைவேற்றுவேன்: புதிய கலெக்டர் கவிதா பேட்டி

திருவள்ளூர், ஜூன் 2: திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது கலெக்டராக பொறுப்பேற்ற பின், மக்களின் நியாயமான கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்றுவேன் என்று கலெக்டர் கவிதா தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த மு.பிரதாப், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு, கவிதாவை திருவள்ளுர் மாவட்ட கலெக்டராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது கவிதா கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக, அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் உள்பட மாவட்ட அளவிலான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் இருக்கையில் அமர்ந்த கலெக்டர் கவிதா, முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்டது மகிழ்ச்சியடைவதோடு பெருமை கொள்கிறேன். திருவள்ளூர் மாவட்டம் பாரம்பரியமான மாவட்டம், தொழில்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையை சிறப்பாக முன்னேற்றத்திற்காக பார்க்க வேண்டி உள்ளது. ஆனாலும், நான் சிறப்பாக செயலாற்றுவேன். 100 சதவீதம் பங்களிப்பை அளித்து அனைத்து திட்டங்களை செயல்படுத்துவதிலும் சரி, மக்களின் கோரிக்கைகள நிறைவேற்றுவதிலும் திறமையாக பணியாற்றுவேன்.
நியாயமான கோரிக்கைகள் காலதாமதம் இல்லாமல் நிறைவேற்றப்படும். ஆவின் பால் கொள்முதலை அதிகப்படுத்த தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: