திருவள்ளூர், ஜூன் 3: திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 414 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 58 குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய 4 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இந்த 4 உட்கோட்டங்களிலும் 24 காவல் நிலையங்கள் உள்ளன. பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்யும்படி, மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்த சுக்லா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய 4 காவல் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 24 போலீஸ் நிலையங்களிலும் 822 ரவுடிகள் பட்டியலை தயார் செய்தனர். இந்த, பட்டியலில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 414 ரவுடிகளை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். இதில், கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளிகள் 356 பேர் இனிமேல் எந்தவிதமான சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளிலும் ஈடுபட மாட்டோம் என்றும், அப்படி மீறி சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் ஒப்புதல் பத்திரங்களை எழுதி கொடுத்து வருகின்றனர். மேலும், மாவட்டம் முழுவதும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட வரும் 58 குற்றவாளிகளை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
