திருத்தணி, ஜூன் 4:ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் (வருவாய் தீர்வாயம்) ஜமாபந்தி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட மேலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் வருவாய் துறை சார்ந்த சான்றுகள் நலத்திட்ட உதவிகள் கேட்டு பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். இதில் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஜமாபந்தி அலுவலர் ராஜேஷிடம் கூட்டாக மனு வழங்கினர். அம்மனுவில், எங்கள் கிராமத்தில் கவர சமுதாயத்தை சேர்ந்த 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டுக்கு முன்பு வரை தடையின்றி எங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்று வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த ஓர் ஆண்டாக ஜாதி சான்று வழங்க கிராம நிர்வாக அலுவலர் மறுத்து வருகிறார். இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. உடனடியாக உரிய விசாரணை செய்து ஜாதி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தெரிவித்துள்ளனர். முகாமில் வட்டாட்சியர் விஜயபாஸ்கர், தனி வட்டாட்சியர் மலர்விழி, காவல் ஆய்வாளர் கார்த்திக், வருவாய் ஆய்வாளர் தேவி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் செல்வம், கலீஸ், சிவகுமார், ரியாஸ் காபூர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பள்ளிப்பட்டு முகாம்: பள்ளிப்பட்டு வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது. திருத்தணி கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான கனிமொழி தலைமையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் 44 மனுக்கள் பெறப்பட்டு 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வட்டாட்சியர் பாரதி, தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, துணை வட்டாட்சியர் ஆறுமுகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் வேலு, ஜெகன், தர்மலிங்கம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருத்தணி முகாம்: திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரும், துணை கலெக்டருமான வெங்கடேசன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. பொதுமக்கள் பங்கேற்று 32 மனுக்கள் வழங்கினர். வட்டாட்சியர் குமார், தனி வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
