நாகர்கோவில், மார்ச் 4 : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 7ம் தேதி நாகர்கோவில் வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் பாஜ குமரி மாவட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரசார திட்டங்களை வகுத்துள்ளது. ஏற்கனவே 3 முறை பா.ஜ. மாநில தலைவர் முருகன் நாகர்கோவில் வந்து பிரசார யுக்திகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ தேசிய தலைவர்கள் வர உள்ளனர். பிரதமர் மோடி கூட, பிரசாரத்துக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 7ம் தேதி காலை 10.30க்கு நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கும் அவர் அங்கிருந்து கார் மூலம் பீச்ரோடு சந்திப்பு வழியாக சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்து மீண்டும் கோட்டார், இந்து கல்லூரி சாலை, செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு வருகிறார். வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.