சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் மருதூர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார். இணை செயலாளர்கள் புஷ்பராஜ், முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜன், திப்பம்பட்டி ஆறுச்சாமி, துணை செயலாளர்கள் பா.துரைசாமி, மு.பொன்தோஸ், மு.பரமானந்தம், சி.தசரதன், முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, கொ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி, கலைஞரின் பிறந்தநாளை, ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில், ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில், கலைஞரின் பிறந்தநாளான, வரும் ஜூன் 3ம் தேதி மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வார்டுகளில் திமுக கொடியேற்றி, இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும்.
ஆதிதிராவிடர் நலக்குழு’வினை பெயர் மாற்றம் செய்து `சமூகநீதிக் குழு’ என்று பெயர் மாற்றம் செய்து அறிவித்திட வேண்டும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற காங்கிரஸ், ஒரு நன்றி உணர்வு இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச்சென்று நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் இழைத்ததை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
