×

சரக அளவில் இருந்த பதவி உயர்வு தேர்வு முறை ரத்து; காவல் துறையில் மாநில அளவிலான சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு: ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிரேட்-2 கான்ஸ்டபிளாக தேர்வு செய்யப்படுபவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்தபிறகு கிரேட்-1 காவலர்களாகவும், அதன் பிறகு 5 ஆண்டுகள் பணி முடித்த பிறகு தலைமை காவலர்களாகவும், மேலும் 10 ஆண்டுகள் பணி முடித்த பிறகு சிறப்பு சப்-இன்ஸ்பெஸ்டர்களாகவும் பதவி உயர்வு தரப்படும் நடைமுறை தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கிரேட்-1 காவலராக தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட சரகங்களில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்படும்போது அங்குள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் சீக்கிரமே பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள்.

சரக அளவில் நடைபெறும் பதவி உயர்வு தேர்வில் வெற்றி பெற்று பதவி உயர்வு பெறுவதால் பல மூத்த காவலர்கள் தங்களின் ஜூனியர்களுக்கு கீழ் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு காலி பணியிடங்கள் குறைந்த அளவே கிடைப்பதால் விரைவில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் குறைவு. இந்த சிக்கலான பிரச்னையால் பல காவலர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுமார் 170 பேர் தொடர்ந்த வழக்குகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நீண்ட நாட்களாக விரிவாக விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணையின்போது நீதிபதிகள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனிடம் இதுகுறித்து அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் மனு தாக்கல் செய்தார். அதில், ஆயுதப்படையில் கிரேட்-2 காவலராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு மாநில அளவிலான சீனியாரிட்டி முறை அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2006 முதல் நடைபெற்ற சரக அளவிலான பதவி உயர்வு வாரிய தேர்வு முறை என்ற தமிழ்நாடு காவலர் பணி சிறப்பு விதிகள் தேவையில்லை என்று அரசு முடிவெடுத்துள்ளது.

எனவே, மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசின் முடிவின்படி கடந்த ஆயுதப்படையில் 1993 பேட்ஜில் தேர்வாகி இதுவரை பணியில் உள்ளவர்களுக்கு மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இதற்கான பட்டியல் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மாநில அளவிலான சீனியாரிட்டி 2026 ஜனவரி 1ம் தேதி பணியில் இருப்பவர்களிலிருந்து அமல்படுத்தப்பட வேண்டும். 2025 டிசம்பர் 31ம் தேதி அல்லது அதற்கு முன்பு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இது பொருந்தாது.

இந்த உத்தரவின் அடிப்படையில் அவர்கள் பணப்பலன்களையோ நிலுவை பலன்களையோ கோர முடியாது. அதே நேரம் ஏற்கனவே சரக அடிப்படையிலான தேர்வு மூலம் பதவி உயர்வு பெற்றவர்களையும் அவர்கள் பெறும் பலன்களையும் தொந்தரவு செய்யக்கூடாது. மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு குறித்து அரசு உடனடியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும். மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்து 2 மாதங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும். 2026 ஜனவரி 1ம் தேதி ஓய்வு பெறுபவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த வழக்கில் விரைந்து முடிவெடுக்க நீதிமன்றத்திற்கு உதவிய அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவிக்கிறது என்று கூறி வழக்குகளை முடித்து வைத்தனர்.

Tags : Chennai ,Tamil Nadu Uniformed Services Selection Board ,
× RELATED தஞ்சாவூர் அருகே காவல் நிலையத்தில்...