×

கடற்கரை சாலையில் ரூ.8.93 கோடியில் நடைபெறும் கட்டுமான பணியை அமைச்சர் ஆய்வு

 

சென்னை: கடற்கரை சாலையில் ரூ.8.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் ராஜ்மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை, கடற்கரை சாலையில் ரூ.8.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமான பணிகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 19,741 சதுரடியில் கட்டப்பட்டு வரும் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மாணவி என்.எஸ்.இசை 1330 திருக்குறள் ஒப்புவித்து அதற்கான பொருளையும் விளக்கி கூறினார். தொடர்ந்து, அதே பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மாணவி எஸ்.காவ்யா 195 நாடுகளின் தேசியக் கொடியை பார்த்து அதற்குரிய நாட்டின் பெயரை கூறினார். அமைச்சர் மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தனித்திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென கூறி அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்வேல், உதவிப் பொறியாளர் தமிழரசி, பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தவச்செல்வி, உதவி ஆசிரியர் ராபர்ட் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Beach Road ,Chennai ,Rajmohan ,Bharat Charana Scouts Headquarters ,
× RELATED தஞ்சாவூர் அருகே காவல் நிலையத்தில்...