×

மோடியுடன் 35 வருட நட்பு: புத்தகம் வெளியிட்ட அமைச்சர்

 

புதுடெல்லி: பிரதமர் மோடியுடனான 35 ஆண்டு கால தொடர்பு குறித்து ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சவுகான் புத்தகம் வெளியிட்டார்.  பிரதமர் மோடியுடனான தனது நீண்டகாலத் தொடர்பை விவரிக்கும் வகையில் தான் எழுதிய அப்னபன் என்ற புத்தகத்தை ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சவுகான் எழுதினார். நேற்று அந்த புத்தகத்தை முன்னாள் துணை ஜனாதிபதி. வெங்கையா நாயுடு மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா ஆகியோர் வெளியிட்டனர். இந்த நிகழ்வில் சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் டெல்லி முதல்வர்கள் உட்பட பல மூத்த தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் சிவராஜ்சிங் சவுகான் கூறியதாவது: சில நேரங்களில் வாழ்க்கையில், உலகம் ஒரு மாபெரும் தலைவர் என்று போற்றும் ஒருவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். ஆனால் உண்மையில் அவர் ஒரு தேடுபவராகவும், மிக எளிய மனிதராகவும் இருப்பார். நரேந்திர மோடி அத்தகைய ஒரு மனிதர். அவருடனான எனது தொடர்பு 35 ஆண்டுகள் பழமையானது.

இந்த ஆண்டுகளில், அவர் நாட்டின் நலனுக்காக ஒவ்வொரு கணமும் வாழ்வதை நான் கண்டுள்ளேன். தேசத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக அவரது இதயம் துடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த நாட்டின் மக்கள், அவர் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும் குடியிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் மீது மோடி ஆரம்பத்திலிருந்தே அதிக முக்கியத்துவம் காட்டி வந்தார். பல மூத்த அரசியல்வாதிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்பு குறித்து அறிமுகமே இல்லாதிருந்த காலகட்டத்திலேயே, மோடி அவற்றைப் பற்றிப் பேசியுள்ளார்.

இந்தியா தனது விதியைத் தானே வடிவமைத்துக்கொண்டு, ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டுமென்றால், தொழில்நுட்பம் இன்றியமையாதது என்பதை அவர் அறிந்திருந்தார். சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை, மற்ற பலருக்கும் முன்பாகவே பிரதமர் மோடி உணர்ந்திருந்தார். அவரால் வெகு தொலைவில் உள்ளவற்றைக் காணவும், எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கவும் முடிந்தது; அதற்கேற்ப அவர் உரிய காலத்திற்கு முன்பாகவே ஆயத்தப் பணிகளை மேற்கொள்வார்.

பிற்காலத்தில், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கணினிகளின் முக்கியத்துவத்தை மட்டுமல்லாமல், அவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதத்தையும், சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்த விதத்தையும் நாங்கள் கண்டோம்; ஆனால் அதே வேளையில், என்னைப் போன்ற கட்சித் தொண்டர்கள் சமூக ஊடகங்கள் பயனற்றவை என்றே கருதிக்கொண்டிருந்தோம். செயற்கை நுண்ணறிவு துறையில்கூட, மோடி ஒரு கற்பனை வளம் மிக்க தொலைநோக்குச் சிந்தனையாளராகத் திகழ்கிறார்.

அவர் செயற்கை நுண்ணறிவு மாநாடுகளை ஏற்பாடு செய்து, உலகெங்கிலும் இருந்து நிபுணர்களை அழைத்தார். தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டை மாற்றியமைக்கும் பேரார்வத்தை நான் அவரிடம் கண்டிருக்கிறேன். நெருக்கடிகளை வாய்ப்புகளாக மாற்றும் திறன் மோடிக்கு உண்டு. சிலர் பேரழிவுகளில் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள், ஆனால் மோடி பேரழிவுகளை வாய்ப்புகளாக மாற்றுகிறார், மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தபோது எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்ட சமயத்தில் மோடி என்னை தொலைபேசியின் அழைத்தார்.

அவர் அன்புடன் என்னையும் என் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளச் சொன்னார், நான் என்ன மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன் என்று கேட்டார், மேலும் பிராணாயாமத்தைத் தொடருமாறு அறிவுறுத்தினார். யார் இவ்வளவு செய்வார்கள்?. மோடி புகழை விட பணிக்கே மதிப்பு கொடுத்தார். இவ்வாறு பேசினார்.

* மோடி இமெயில் என்ற போது ‘எந்த பெண்’ என்ற தலைவர்

மோடி ‘இமெயில்’ என்று சொன்னபோது, ஒரு பாஜ தலைவர் ‘எந்தப் பெண்?’ என்று கேட்டார் என்று சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’தேர்தலுக்குத் தயாராவதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டிருந்தது, அப்போது மோடி அறையில் இருந்தவர்களிடம் யாரிடம் மின்னஞ்சல் முகவரி உள்ளது? என்ற ஒரு எளிய கேள்வியைக் கேட்டார். அதற்குப் பதிலாக அமைதி நிலவியது. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கத்தொடங்கினர்.

அப்போது பாபுலால் கவுர், அந்த அமைதியைக் கலைத்து, நரேந்திர பாய், நீங்கள் எந்த பெண்ணைப் பற்றிப் பேசுகிறீர்கள்? இந்தப் பெண்- இமெயிலால் என்ன ஆகப் போகிறது? என்று கேட்டார். அவர் இமெயில் என்ற வார்த்தையைத் தவறாகக் கேட்டிருக்க வேண்டும். அல்லது அநேகமாக அதை அவர் கேள்விப்பட்டதே இல்லை’ என்றார்.

Tags : Modi ,New Delhi ,Union Minister ,Shivraj Chouhan ,Union Ministry of Agriculture ,
× RELATED பிரதமர் மோடி பதவியேற்று 12 ஆண்டு நிறைவடைந்தது: பாஜ தலைவர்கள் வாழ்த்து