கழக தோழர்கள் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களை பேச வேண்டாம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று இரண்டாம் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விசிக துணைப்பொதுச்செயலாளரும், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினருமான வன்னியரசு தமிழக அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகானும் அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் திமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம், வெளியில் இருந்து தான் ஆதரவு அளிக்கிறோம், அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று கடந்த வாரம் கூறிய தவெக, ஐயுஎம்எல் ஆகிய இரு கட்சிகளும், அப்படியே தாங்கள் கூறியதை காற்றில் பறக்க விட்டு தற்போது அமைச்சரவையில் இடம்பிடித்து உள்ளன.

ஆனால் இந்த இருகட்சிகளின் சொல்லும், செயலும் சில நாட்களிலேயே மாறி போனதால் திமுக மூத்த தலைவர்கள், திமுக உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலரும் சோஷியல் மீடியாக்களில் விசிக , ஐயுஎம்எல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு.வன்னியரசு
அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.

பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: