மதுரை, மே 22: மதுரை மாநகர் சைபர் கிரைம் போலீசாரிடம், தங்களை ஏமாற்றி சிலர் பணம் பறித்ததாக மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இரு முதியவர்கள் கடந்த 15ம் தேதி புகார் அளித்தனர். இதன் விபரம் வருமாறு: முதியவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், சென்னை டிஜிபி அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் என்றும் கூறி, உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கினை ஏற்படுத்தி, அதில் சட்டத்திற்கு புறம்பான பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாக லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவினர் உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என கூறியுள்ளார். மேலும், இதுசம்மந்தமாக உங்களை விசாரிக்க லக்னோவில் இருந்து வாட்ஸ் அப் வீடியோ வாயிலாக உயர் அதிகாரி அழைப்பார் என்றும் கூறியுள்ளார்.
