×

ஜீப்பில் வந்த முதியவர் குடிபோதையில் அடுத்தடுத்து 5 கார்கள் மீது மோதி விபத்து

 

குன்னூர், மே 26: குன்னூர் அருகே குடிபோதையில் 5 வாகனங்கள் மீது ஜீப்பை மோதிய நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குன்னூர் அருகே உள்ள பெரிய பிக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (55). இவர் நேற்று பெரிய பிக்கெட்டி பகுதியில் இருந்து குன்னூர் நோக்கி தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோபால் கடுமையான மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட கார்கள் மீது அடுத்தடுத்து பலமாக உரசி நின்றது. இந்த விபத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சில பலத்த சேதமடைந்தன.

விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், கோபாலின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அருவங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய கோபால் மீது வழக்குப்பதிவு செய்தனர். குடியிருப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Coonoor ,Gopal ,Periya Pikkatti ,
× RELATED மலை பயிர்கள் கண்காட்சியின் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?