திருவண்ணாமலை, மே 20: திருவண்ணாமலை அரசு வேளாண்மைத் துறைக்குச் சொந்தமான மண் பரிசோதனை நிலையம் அருகே ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறை என விரைந்து அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது.திருவண்ணாமலை கோட்டம்பாளையம் சாலையில், அரசு வேளாண்மைத் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள மண் பரிசோதனை நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் ஆகியவை செயல்படுகிறது. இந்த வளாகத்தின் அருகே 50-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் வளர்க்கப்படுகிறது. கடுமையான கோடை வெயிலால் தேக்கு மரங்கள் காய்ந்து, அதன் சரகுகள் முழுவதும் வேளாண் அலுவலக வளாகம் பகுதியில் குவிந்து கிடந்தன.இந்நிலையில், நேற்று மதியம் அந்தப் பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கு குவிந்து கிடந்த காய்ந்த தேக்கு இலைகளுக்கு தீ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
எனவே, காய்ந்த சரகுகளில் பற்றிய தீ, தேக்கு மரங்கள் முழுவதும் பயங்கர வேகத்துடன் பரவத் தொடங்கியது. தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரைந்து வந்து தீயை அணைத்தனர். அதனால் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தீ வைத்த மர்ம நபர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
