டெல்லி: இந்தியாவில் செப்டம்பர் 30ம் தேதி வரை சக்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு. உள்நாட்டு விலைகளைக் கட்டுப்படுத்தவும், விநியோகத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
CXL மற்றும் TRQ ஒதுக்கீடுகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதிகளுக்கு இந்தத் தடை பொருந்தாது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய சக்கரை உற்பத்தி நாடக இந்தியா இருந்துவரும் நிலையில் தற்போது ஒன்றிய அரசு இந்த தடையை விதித்துள்ளது. இந்த உத்தரவு, பதப்படுத்தப்படாத சக்கரை, வெள்ளை சக்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சக்கரை ஏற்றுமதிகளை உள்ளடக்கியது.
ஏற்கனவே ஏற்றுமதிக்கு உள்ள சரக்குகள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்கப்படும். அறிவிப்புத் தேதிக்கு முன்னர் சரக்கு ஏற்றுதல் தொடங்கியிருந்தாலோ, அல்லது உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்னர் கப்பல் சரக்கு அனுப்பும் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு, கப்பல் இந்தியத் துறைமுகம் ஒன்றில் நங்கூரமிட்டிருந்தாலோ சரக்கு அனுப்பும் பணிகள் தொடரலாம். அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே சுங்க அதிகாரிகளிடமோ அல்லது பாதுகாவலர்களிடமோ சரக்குகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், ஏற்றுமதி அனுமதிக்கப்படும்.
