கொல்கத்தா: மேற்குவங்கத்தின் முந்தைய ஆட்சியில் ஊழல் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க பாஜ அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் பள்ளி ஆசிரியர் பணி நியமனம், நகராட்சி நிர்வாக ஆள் சேர்ப்பு ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்த சூழலில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ அரசு அமைந்துள்ளது.
சுவேந்து அதிகாரி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “சட்டத்தின்கீழ், சிபிஐ அல்லது தேசிய குற்ற புலனாய்வு முகமை ஆகியவை, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, வழக்குள் பதிய அல்லது நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசு நான்கு ஆண்டுகளாக நான்கு சிபிஐ வழக்குகளை தடுத்துள்ளது. ஊழல் அதிகாரிகளை பாதுகாக்க முந்தைய திரிணாமுல் அரசு வேண்டுமென்றே அனுமதியை தடுத்துள்ளது. தற்போது 3 துறைகளிலும் நடந்த ஊழல் பற்றி விசாரிக்க சிபிஐ வேண்டிய அனுமதி அளித்துள்ளோம்” என்றார்.
