×

எக்ஸ் தளத்தில் அரசியல் பதிவுகளை நீக்கும் உத்தரவுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அரசியல் ரீதியாக கருத்துக்களை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கிய உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அதுதொடர்பாக எக்ஸ் தள பக்கங்களில் இடம்பெற்ற கணக்குகளை முடக்க தமிழக சைபர் கிரைம் பிரிவு கடந்த மே 8 ஆம் தேதி எக்ஸ் தளத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் வட தமிழகத்தின் தலைவர் சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அவரது மனுவில், அரசியல் ரீதியான விமர்சனங்களை முறையாக ஆய்வு செய்யாமல், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி எக்ஸ் தள கணக்குகளை முடக்குவது கருத்துரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வன்முறையை தூண்டும் விதமாகவோ, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ இல்லாத விமர்சனங்களை பதிவிட்ட எக்ஸ் தள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன, இது சட்டவிரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அரசியல் ரீதியாக கருத்துக்களை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கேட்டுகொண்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது எக்ஸ் தள கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கும் எதற்காக முடக்கப்பட்டது என்ற தகவல்களும் தெரிவிக்கப்படுவதில்லை என மனுதாரர் வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த உத்தரவில் சட்ட விதிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை என்று கூறி அந்த நோட்டீஸ்க்கு இடைக்கால தடை விதித்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் எக்ஸ் கணக்குகளை முடக்க, எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 18 சமூக தளங்களின் முடக்கத்தை நீக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Tags : Chennai High Court ,Chennai ,High Court ,Tamil Nadu ,
× RELATED தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த...