120 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்ததால் முதல்வராக விஜய் இன்று பதவி ஏற்பு: நேரு உள் விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு விழா

 

சென்னை: தவெக தலைவர் விஜய் நான்காவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், இன்று காலை 10 மணிக்கு முதல்வராகப் பதவியேற்கிறார். 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் காலக்கெடு விதித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதியும் நடைபெற்றது. இதில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தது.

அதேநேரம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதில், திமுக மட்டும் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் தலா 2 தொகுதிகள், தேமுதிக 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாமக 4, அமமுக, பாஜ தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதலில் மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக் கோரினர்.

மேலும், 2 வாரங்களில் தாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கக் கால அவகாசம் வழங்குமாறும் அந்தக் கடித்ததில் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து, 5ம் தேதி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரினர். ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கொடுத்தால்தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று தெரிவித்துக் கோரிக்கையை நிராகரித்தார் ஆளுநர்.

தொடர்ந்து, விஜய் 6ம் தேதி சட்ட வல்லுநர்களுடன் ஆளுநரைச் சந்தித்து மீண்டும் வலியுறுத்தினார். அப்போதும் ஆளுநர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களிடம் விஜய் முதல்வராக ஆதரவு அளிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் பெறப்பட்டது. இந்நிலையில், தவெக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்களைப் பெற திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியது. இதில் காங்கிரஸ் கட்சி 5 சட்டமன்ற உறுபினர்களையும், மற்ற நான்கு கட்சிகளும் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி ஆதரவு தருவதாக அறிவித்தது. அதேநேரம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆலோசித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெறவேண்டும், ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜ மறைமுகமாக ஆள்வதைத் தடுக்கவேண்டும் என்பதால் வெளியில் இருந்து ஆதரவு தருவாதாக நேற்று முன்தினம் அறிவித்தனர். அதேநேரம், தாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில், விஜய் நேற்று முன்தினம் மாலை என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்களுடன் மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்து 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், ஆட்சி அமைப்பதற்குப் போதுமான பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் மீண்டும் தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

இந்தப் பரபரப்பான சூழலில், விசிக என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நேற்று நிலவியது. நேற்று முன்தினம் விசிக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பது தொடர்பான ஆதரவுக் கடிதத்தை ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கினார் விசிக தலைவர் திருமாவளவன். அதேபோல், நேற்று முன்தினம் தாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று திட்டவட்டமாக ஐயூஎம்எம்ல் தெரிவித்திருந்த நிலையில், நேற்றுத் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது.

இவர்கள் ஆதரவு தெரிவித்ததன் மூலம் தவெகவுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. விஜய் ஆட்சி அமைப்பதற்குப் போதுமான ஆதரவு கிடைத்ததைக் கொண்டாடும் விதமாக தவெகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்தச் சூழலில், ஆட்சி அமைப்பதற்குப் போதுமான ஆதரவு கிடைத்தவுடன் நான்காவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார் விஜய். ஆனால், திடீரென பாதிவழியில் யூ டர்ன் அடித்து மீண்டும் பட்டினப்பாக்கம் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார். ஆளுநர் நேற்று மாலை கேரளம் செல்லத் திட்டமிட்டிருந்ததால் விஜய்யைச் சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்று தகவல் வெளியாகியது.

தொடர்ந்து, ஆளுநரின் கேரளப் பயணம் ரத்து செய்யப்பட்டு, விஜய்க்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, நான்காவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய். அப்போது, பெ.சண்முகம், மு.வீரபாண்டியன், செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், வன்னி அரசு, சு.வெங்கடேசன், என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடனிருந்தனர். விஜய்யின் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஆட்சியமைக்க அழைப்புவிடுத்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

மேலும், மே 13ம் தேதிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் காலக்கெடு விதித்துள்ளார். இன்று முதல்வராகப் பதவியேற்கும் விஜய்யுடன் சேர்த்து செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்டவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

* யார், யார் அமைச்சர்கள்?

விஜயின் அமைச்சரவையில், செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நிர்மல்குமார், ராஜ்மோகன், முஸ்தலா ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகிள்ளது. அதில் விஜய் – பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை, செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை, நிர்மல் குமார் – மின்சார துறை, ஆனந்த் – நகராட்சி நிர்வாகத்துறை, வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை, அருண் ராஜ் – வணிகவரித்துறை, ஆதவ் அர்ஜூனா – விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை, ராஜ்மோகன்- ஆதிதிராவிடர் நலத்துறை, முஸ்தபா- சிறுபான்மை நலத்துறை என தகவல் வெளியாகியுள்ளது.

* தீவிர பாதுகாப்பு

இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் முதல்வராகப் பதவியேற்கிறார். அரங்கத்தினுள் அதற்கான ஏற்பாடுகள் நேற்று விரைவாக நடைபெற்றது. மேலும், நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் விதிகளை மீறி உள்ளே நுழைய முயற்சிப்பார்கள் என்பதால் உயரமான தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: