×

சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ராஜினாமா

 

கவுகாத்தி: அசாம் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்ததையடுத்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். அசாம் மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. தற்போது 126 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களை கைப்பற்றி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இதில் பாஜக மட்டும் தனித்து 82 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 64 இடங்களை விட கூடுதல் பலத்தை பெற்றது. இக்கூட்டணியில் அசாம் கண பரிஷத் 10 இடங்களையும், போடோலாந்து மக்கள் முன்னணி 10 இடங்களையும் கைப்பற்றின.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்திற்கு தேவையான 22 இடங்களை கூட பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. ஜலுக்பாரி தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்ற முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இன்று கவர்னர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை நேரில் சந்தித்து முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதிய அரசு அமையும் வரை ஹிமந்த பிஸ்வா சர்மாவை இடைக்கால முதல்வராக நீடிக்குமாறு கவர்னர் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பாஜகவின் புதிய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டசபை குழு தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக மேலிட பார்வையாளர்களாக ஜே.பி.நட்டா மற்றும் அரியானா முதல்வர் நாயப் சிங் சைனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் முறைப்படி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்படும். வரும் வார இறுதியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : BJP ,Assam ,Chief Minister ,Himanta Biswa Sarma ,Guwahati ,BJP alliance ,Assam assembly elections ,
× RELATED பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசுப்...