திருப்பூர், பிப்.26: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பு சாலை மறியல் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் காளியப்பன், மாவட்ட துணை தலைவர் ஜார்ஜ் வர்கீஸ், மாவட்ட துணை தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி தர வேண்டும். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 என்பதை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வடக்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 42 மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் ரயில் நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.