சிவகங்கை, பிப்.26: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பயன் நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும் அறிவித்தன. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் ஊழியர்கள் பஸ்களை பணிமனைகளில் கொண்டு வந்து நிறுத்த தொடங்கினர். நேற்று அதிகாலையில் இயக்கப்பட வேண்டிய பஸ்கள் அனைத்தும் ஊழியர்கள் வராததால் பணிமனைகளிலேயே நின்றன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மண்டலம் சார்பில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் பணிமனை உள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளில் 159 ரூட் பஸ்கள், 146 டவுன் பஸ்கள் உள்பட சுமார் 300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் ஆயிரத்து 200 தொழிலாளர் பணியில் உள்ளனர்.