×

வெறுப்பு பேச்சு தொடர்பாக புதிய சட்டங்களை இயற்ற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வெறுப்பு பேச்சு தொடர்பாக புதிய சட்டங்களை இயற்ற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தது.

கடந்த 2023ம் ஆண்டில், மகாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்து ஜங்கத்ரிதி சமிதி என்ற அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ., டி.ராஜா சிங், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உமாத்யா மற்றும் ஷகீன் அப்துல்லா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் ராய்ப்பூர், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவின் யவத்மால் ஆகிய இடங்களில் வன்முறை ஏற்படாமல் தடுக்க மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ‘வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்தவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் நாட்டில் போதுமான சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. ஆனால் அந்த சட்டங்களை செயல்படுத்துவதில்தான் பெரும் தொய்வு நிலவுகிறது. புதிய சட்டங்களை உருவாக்குவது என்பது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. எந்த முறையில் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட அதிகாரமாகும். அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் நீதிமன்றங்கள், சட்டங்களை விளக்க முடியுமே தவிர, புதிய சட்டத்தை இயற்றும்படி அரசை கட்டாயப்படுத்த முடியாது’ என்று தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், ‘பி.என்.எஸ்.எஸ்., சட்டத்தின் கீழ் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டப்பிரிவுகள் உள்ளன. இதனால் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக எந்த வெற்றிடமும் இல்லை. மேலும் இந்த விஷயத்தில் நாங்கள் புதிய வழிகாட்டுதல்களை வழங்கவோ அல்லது புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்றோ எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வெறுப்பு பேச்சு மற்றும் வதந்திகள் நாட்டின் சகோதரத்துவத்தையும் அரசியலமைப்பு ஒழுங்கையும் நேரடியாக பாதிக்கின்றன என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சட்டத்தில் திருத்தங்கள் தேவையா என்பதை பரிசீலிப்பது ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. எனவே, புதிய சட்டங்களை இயற்ற உத்தரவிடக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்’ என்று குறிப்பிட்டனர்.

Tags : EU ,Supreme Court ,NEW DELHI ,Maharashtra ,Chhattisgarh ,
× RELATED அசாமில் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான...