சென்னை: தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் சென்ற பயணிகள் சென்னை திரும்பி வரும் நிலையில் விமான டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களில் வாக்களிக்க சென்றவர்கள், நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர். ஒரே நேரத்தில் பயணிகள் குவிந்ததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டது.
ஓரிரு விமானங்களில் மட்டுமே, ஒரு சில டிக்கெட்டுகள் இருந்தன. அந்த டிக்கெட் கட்டணங்கள் பயணிகளை அதிர்ச்சி அடையும் விதத்தில், மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளன. இதேபோல் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பால், சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
