செய்யாறு, ஏப். 25: செய்யாறு அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் பூட்டை உடைத்து 17 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி லட்சுமி. இவர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் பக்கத்து தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார். மறுநாள் 21ம் தேதி காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 17 சவரன் நகையும் ரொக்க பணம் ரூ.1 லட்சம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நேற்று லட்சுமியின் மகன் அரவிந்த் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் இந்திரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வீட்டில் திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
