கோவை,ஏப்.18: கோவை என்.எஸ்.ஆர் ரோட்டை சேர்ந்தவர் முகைதீன் (50).பார்வையற்றவர். இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ரூபா என்ற பெண் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவரது கடையின் அருகில் கடை நடத்தி வரும் ராஜீவ் நகரை சேர்ந்த சதீஷ் (34) என்பவர் முகைதீன் கடை முன்பு பைக்கை நிறுத்தி சென்றார். இதனை ரூபா கண்டித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைக் கேட்ட முகைதீன் வாக்கிங் ஸ்டிக்குடன் கடைக்கு வெளியில் வந்து ரூபாவுக்கு ஆதரவாக பேசினார். ஆத்திரமடைந்த சதீஷ், முகைதீன் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை பறித்து அவரை தாக்கினார். இதில் காயமடைந்த முகைதீன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து முகைதீன் அளித்த புகாரின் பேரில் சாய்பாபா போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
