வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை தேர்தல் அலுவலர் ஆய்வு

திருப்போரூர், ஏப்.17: திருப்போரூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியினை, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் மாலதி ஹெலன் ஆய்வு செய்தார். திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் விசிக, பாமக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட 11 கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நேற்று தொகுதியில் உள்ள 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் சின்னம், பெயர் பொருத்தும் பணி தொடங்கியது. தேர்தல் அலுவலர் விஜயகுமாரி, உதவி தேர்தல் அலுவலர் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு பூத் வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. அனைத்து கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள், பிரதிநிதிகளின் முன்னிலையில் இயந்திரங்களில் பேட்டரி பொருத்துதல், சீல் வைத்தல், வி.வி பேட் இயந்திரங்களில் பேப்பர் ரோல் பொருத்துதல், வாக்குப் பதிவு இயந்திரங்களின் வேட்பாளர்களின் சின்னம், பெயர் ஆகியவற்றை பொருத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளால் தேர்தல் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தவிர வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இப்பணியை, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் மாலதி ஹெலன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) லோகநாயகி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: