ஊத்தங்கரை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சேலத்திற்கு எலுமிச்சை பழம் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் புறப்பட்டது. லாரியை தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரை சேர்ந்த சரவணன்(38) என்பவர் ஓட்டி வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வெப்பாலம்பட்டி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் சரவணனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் சரவணனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனத்தை கிரேன் மூலம் மீட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
