*தப்பியோடிய 2 பேருக்கு வலை
நெல்லை : நெல்லை அருகே கோபாலசமுத்திரத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 680 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உதவிப் பொறியாளர் சிவசைலஜா தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பேட்டை சுத்தமல்லி அடுத்த கோபாலசமுத்திரம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கார் ஒன்றை தடுத்துநிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால், அதிகாரிகளை கண்டதும் அந்த கார் அங்கிருந்து வேகமாக திரும்பி சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை பின் தொடர்ந்து துரத்திச் சென்றனர்.
கோபாலசமுத்திரம் அக்ரஹார தெருவில் சென்றபோது தாறுமாறாக ஓடிய கார் நின்று போனது. இதையடுத்து காரில் பயணித்த 2 பேர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர்.
பின்னர் அங்குவந்த அதிகாரிகள் காரை சோதனையிட்டனர். இதில் தலா 40 கிலோ எடை கொண்ட 17 மூடைகளில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மொத்த எடை சுமார் 680 கிலோ ஆகும்.
இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் நெல்லை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த நெல்லை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார், காரில் இருந்து தப்பி ஓடிய இரு நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
