கோவை,ஏப்.13: கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்(40), மினி லாரி டிரைவர். நேற்று முன்தினம் வினோத் வெள்ளலூர் மெயின் ரோட்டில் மினி லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 பைக்கில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் வேகமாக மினி லாரியில் மோதுவது போல் வந்துள்ளனர். இதனால் வினோத் அவர்களை நிறுத்தி தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் லாரியில் இருந்த சாவியை பறித்து வினோத்தை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் அலறினார். அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
காயமடைந்த வினோத் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து வினோத்தை தாக்கிய புளியகுளத்தை சேர்ந்த மார்ட்டின் ஜோசப் (21), சுந்தராபுரம் குறிச்சியை சேர்ந்த யுபேந்திரன் (21), மனோஜ் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றொரு வாலிபரான பப்லு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
