சேலம், ஏப்.9: சேலத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (25). அதேபகுதியை சேர்ந்தவர் நீலமேகன் (27). இவர்கள் இருவரும் தொடர்ந்து கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதம் 15ம் தேதி சேலம் அயோத்தியாபட்டணம் குயவன்காடு என்ற இடத்தில் இருவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது அவர்களை போலீசார் கைது செய்து 2கிலோ 400கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன், துணை கமிஷனர் அங்கீத் சிங் ஆகியோர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கமிஷனர் அனில்குமார் கிரி சிறையில் உள்ள சுரேஷ், நீலமேகன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த ஆண்டில் சுரேஷ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
