×

திருவளக்குறிச்சி வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பொதுபார்வையாளர் நேகா பன்சால் ஆய்வு

பாடாலூர், ஏப்.8: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள திருவளக்குறிச்சி வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் நேகா பன்சால், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்குச்சாவடி அலுவலர்களிடம் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பணிகள் குறித்து கேட்டறிந்தார். அமைதியாகவும், சுதந்திரமாக தேர்தல் நடத்த தேர்தல் அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லும் போதும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கழிப்பறை, குடிநீர், வரிசையில் நின்று வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமரா கொண்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. எந்த இணையதளம் வாக்குச்சாவடி மையத்தில் தடையின்றி கிடைக்கும் என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவளக்குறிச்சி மட்டுமின்றி ஆலத்தூர் வட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், கண்காணிப்பு கேமரா அமைப்பதற்காக வசதிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, கிராமத்தை சேர்ந்த வாக்காளர்களை சந்தித்த நேகா பன்சால், வாக்களிப்பதின் பயன் குறித்தும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார். தேர்தல் நேரத்தில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸாருக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Tags : Election Observer ,Neha Bansal ,Thiruvalakurichi ,station ,Patalur ,Thiruvalakurichi polling station ,Alathur taluka ,Perambalur district ,
× RELATED பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு