பழநி: பழநி அருகே ஓபுளாபுரத்தில் தேங்காய் நார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஓபுளாபுரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். தேங்காய் நார் தயாரிப்பு குறுந்தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று இவரது தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. தேங்காய் நார்களில் பற்றிய தீ மளமளவனெ கொளுந்து விட்டு எரிய துவங்கியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பழநி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார்கள் மற்றும் தேங்காய் நார் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
