புதுடெல்லி: உலக சராசரியை விட இந்திய ஊழியர்கள் பணியிட இடையூறுகளுக்கு கணிசமான அளவில் ஆளாவதாகத் தெரிவிப்பதோடு, திறன் மேம்பாடு மற்றும் திறன் சரிபார்ப்பின் மீதும் வலுவான உந்துதலை வெளிப்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. டோபல் மற்றும் ஜிஆர்இ போன்ற முக்கியத் தேர்வுகளை நடத்துவதில் பெயர் பெற்ற, பிரின்ஸ்டனைச் சேர்ந்த எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீசஸ் (ஈடிஎஸ் ) நிறுவனம் ஆய்வு நடத்தி மனித முன்னேற்ற அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 86 % தொழிலாளர்கள் கடந்த ஆண்டில் பணியிடத்தில் பெரிய இடையூறுகளை அனுபவித்துள்ளனர்.
இது, கடந்த 12 மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு பெரிய மாற்றத்தையாவது சந்தித்ததாகக் கூறிய 67 சதவீதத்தினரின் உலக சராசரியை விட அதிகமாகும். இந்தியாவில் வேலைவாய்ப்புச் சூழலில் பணியிட மாற்றம் ஒரு முக்கிய அம்சமாக மாறிவருகிறது என்பதை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. பல பணியாளர்கள் புதிய கருவிகளுக்கும், மாறிவரும் பணித் தேவைகளுக்கும், எதிர்காலத் திறன்களுக்கான அதிகரித்து வரும் தேவைக்கும் தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.
அதே நேரத்தில் தங்கள் திறன்களை அளவிடுவதற்குத் தெளிவான மற்றும் நம்பகமான வழிகளைத் தேடுகின்றனர். இந்தியா முழுவதும் அன்றாடப் பணிகளில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பு அதிகரித்து வருகிறது.பணியாளர்களின் தற்போதைய பணிகளில் 42 சதவீதத்திற்கும் அதிகமானவை செயற்கை நுண்ணறிவு கருவிகளை இயக்குவதை உள்ளடக்கியுள்ளது. இது உலக சராசரியை விட அதிகமாகும். தொழில்நுட்பம், பணிப் பொறுப்புகளையும் செயல்திறன் எதிர்பார்ப்புகளையும் எவ்வளவு வேகமாக மாற்றியமைக்கிறது என்பதை இது பிரதிபலிக்கிறது.
தொழில் வல்லுநர்கள் தங்களின் தொழில் நிலைத்தன்மையை, தொடர்புடைய திறன்களைத் தொடர்ந்து வளர்த்து வெளிப்படுத்தும் திறனுடன் அதிகளவில் தொடர்புபடுத்துவதால், தொழில்நுட்பம், பணிப் பொறுப்புகள் மற்றும் செயல்திறன் எதிர்பார்ப்புகளில் ஏற்படும் விரைவான மாற்றங்களை இந்தியப் பணியாளர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
