போரூர், மார்ச் 28: சென்னை தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அசோக் நகர் 11வது அவென்யூ பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது தனியார் தங்கம் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் வந்தது. அதை வழிமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போலீசாருடன் சோதனை நடத்தினர். அப்போது 77 கோடியே 29 லட்சத்து 49 ஆயிரத்து 528 ரூபாய் மதிப்புள்ள 381 கிலோ 762 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை ஏற்றி வந்த வாகன ஓட்டுநரிடம் உரிய ஆவணங்களை கேட்டனர். அதற்கு புரசைவாக்கம் மற்றும் சவுகார்பேட்டை பகுதியில் உள்ள தங்க நகைகள் செய்யும் பட்டறைகளில் இருந்து கிண்டியில் உள்ள தங்க நகை ஏற்றுமதி நிறுவனத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
மேலும், கிண்டியில் உள்ள தங்க நகை ஏற்றுமதி நிறுவனம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் 20 வாகனங்கள் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொண்டு செல்ல முன் அனுமதி பெற்றதாவும், ஆனால் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொண்டு வந்த வாகனத்திற்கு முறையாக தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெற வில்லை என தெரியவந்தது.ேமலும், 381 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களில் 200 கிலோவுக்கு தான் ஆவணங்கள இருந்ததாகவும், மற்ற 181 கிலோவுக்கு எந்தவித ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்துடன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அசோக் நகர் பகுதியல் பரபரப்பு ஏற்பட்டது.
