சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள அசாமிய சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வடகிழக்கு இந்தியத் திருவிழா எனும் கலாசார விழாவிற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜூபின் கார்க்(52) சிங்கப்பூர் சென்றிருந்தார். செப்டம்பர் 19ம் தேதி ஸ்கூபா டைவிங் செய்வதற்காக ஒரு படகில் சென்றுள்ளார். கடலில் நீந்தும் போது அவர் திடீரென நீரில் மூழ்கி இறந்தார். கார்க் மரணம் குறித்து சந்தேகங்கள் எழுந்ததையடுத்து அசாம் அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதில், ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சியாம் கானு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான சிங்கப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் ஆஜரான உதவி எஸ்பி டேவிட் லிம் சாட்சியம் அளிக்கையில், ‘‘படகில் இருந்து குதிப்பதற்கு முன் உயிர் காக்கும் அங்கியை அணிய மது போதையில் இருந்த ஜூபின் கார்க் மறுத்து விட்டார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையின் அரசு விசாரணை அதிகாரி ஆதம் நக்கோடா கூறுகையில், இது கொலையோ அல்லது சந்தேகத்திற்கிடமான மரணமோ இல்லை. பிரேத பரிசோதனையில் அவர் அதிக மது அருந்தியிருந்தது தெரியவந்தது. ஜூபின் கார்க் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவரை யாரும் தண்ணீருக்குள் தள்ளிவிட இல்லை. அவரை காப்பாற்றிய நீச்சல் வீரர்கள் வேண்டுமென்றே அவரது முகத்தைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.
