வருசநாடு, மார்ச் 24: தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் இலவம் பஞ்சு விவசாயம் ஆண்டுதோறும் கோடையில் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இலவம் காய்கள் வெடித்து பஞ்சு கிடைக்கும். இந்த பகுதி விவசாயிகளிடம் நேரடியாக வியாபாரிகள் இலவம் பஞ்சுகளை கொள்முதல் செய்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50க்கும் மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சந்தைகளில் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ வெறும் ரூ.75க்கு வியாபாரிகள் இலவம் பஞ்சுகளை கொள்முதல் செய்ய வருகின்றனர். ஒரு கிலோ ரூ.75க்கு கொள்முதல் செய்யப்பட்டாலும், இனி வரும் நாட்களில் இலவசம் பஞ்சு விலை ரூ.100ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரைப்பகுதிகளில் இலவம் பஞ்சு மரங்களில் ஓரளவு விளைச்சல் கொடுத்தாலும், வருசநாடு பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் இலவம் பிஞ்சுக் காய்கள் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் இலவம் பஞ்சுக்கு டிமாண்ட் இருக்கும் பட்சத்தில் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது விளைச்சல் இல்லையென்றாலும், விலை உயர்ந்து கை கொடுத்துள்ளதால் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
