×

விவாகரத்து உத்தரவு ரத்தான நிலையில் மனைவி சமையல் செய்யவில்லை என்பது கொடுமையா?.. கணவரின் கருத்தை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்

 

 

புதுடெல்லி: தம்பதிகளுக்கு இடையே வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது காலத்தின் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் கணவர் ஒருவர், தனது மனைவி முறையாகச் சமையல் செய்வதில்லை என்றும், வீட்டு வேலைகளைக் கவனிப்பதில்லை என்றும் கூறி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விரிவுரையாளராகப் பணிபுரியும் அவரது மனைவி மேல்முறையீடு செய்த நிலையில், உயர் நீதிமன்றம் தம்பதியரின் விவாகரத்து உத்தரவை ரத்து செய்தது.

இந்தச் சூழலில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, மனைவி வீட்டு வேலைகளைச் செய்யாதது கொடுமை என்ற கணவரின் வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், ‘மனைவி சமையல் செய்யவில்லை, வீட்டைச் சுத்தம் செய்யவில்லை, துடைக்கவில்லை என்று நீங்கள் கூறுவதை உயர் நீதிமன்றம் நிராகரித்தது சரியானது. இதுவெல்லாம் கொடுமைக்கான காரணமாக இருக்க முடியாது. சமையல் செய்வது, சுத்தம் செய்வது என அனைத்திலும் கணவரும் சமமாகப் பங்கேற்க வேண்டும்.

இன்றைய காலம் மாறிவிட்டது. நீங்கள் ஒரு வேலையாளைத் திருமணம் செய்யவில்லை, ஒரு வாழ்க்கைத் துணையைத்தான் திருமணம் செய்துள்ளீர்கள். இருவரும் படித்தவர்கள், நல்ல பணியில் இருப்பவர்கள், பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாத நிலையில், 8 வயது குழந்தையின் நலனுக்காக ஏன் மீண்டும் இணைந்து வாழக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினர். மனைவியின் வக்கீல் அவர் கணவருடன் வாழத் தயார் என்று கூறிய நிலையில், சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஏப்ரல் 27ம் தேதி தம்பதிகள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Supreme Court ,New Delhi ,
× RELATED புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜக...