புளியங்குடி, பிப். 12: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 17, 18, 19 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 19ம் தேதி புளியங்குடியில் அதிமுக மகளிரணியினரை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதையொட்டி கூட்டம் நடைபெறும் புளியங்குடி மெயின்ரோட்டில் உள்ள திரையரங்கை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி, மனோகரன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி கூறியதாவது: தென்காசி வடக்கு மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 19ம் தேதி 3 இடங்களில் நிர்வாகிகளை சந்திக்கிறார். கடையநல்லூரில் வேனில் இருந்தபடியே பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர், புளியங்குடியில் மகளிரணியினரை சந்தித்து கலந்துரையாடுகிறார். சங்கரன்கோவிலில் தகவல் தொழில்நுட்ப அணியினர் மற்றும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.