விருதுநகர், பிப்.12 : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த பரிசோதனை மையத்திற்கு அதிகாலை புகுந்த நோயாளி ரூ.8 லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான கருவிகளை அடித்து நெறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தூர் படந்தால் அண்ணாநகரை சேர்ந்த சுப்புராஜ் மகன் பாண்டி(38), சிவகாசி அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அனிதா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 15 வருடங்களாக குழந்தை இல்லை. இதனால் கடந்த ஆண்டு அனிதா பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மனைவி இறந்த துக்கத்தில் பாண்டி மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதனால் வயிற்று வலி ஏற்பட்டு கடந்த 8ம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மாலை மேல் சிகிச்சைக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தப்பி, மருத்துவமனை அருகில் உள்ள இளங்கோவன் தெருவில் ஒரு வீட்டிற்குள் புகுந்துள்ளார். திருடன் என நினைத்து அங்கிருந்தவர்கள் பிடித்து அடித்து கிழக்கு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.