சிவகிரி, மார்ச் 17: வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை ஒட்டி மூன்று சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணிகளை தொடங்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியங்குடி, வேலாயுதபுரம், தேவிப்பட்டணம் ஆகிய மூன்று இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல் 9 பறக்கும் படையினர் தங்கள் பணிகளை தொடங்கினர். வேலாயுதபுரம் சோதனை சாவடியில் பிடிஓ மல்லிகா தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
திருவேங்கடம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருவேங்கடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பறக்கும்படை அதிகாரி ஹரி விக்னேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் இருசக்கர வாகனம், கார், பஸ், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனத்தில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கொண்டு ரொக்கம் செல்கிறார்களா என்றும், பரிசு பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று பறக்கும் படை குழுவினர் தெரிவித்தனர்.
