புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பை அரசு அறிவித்த பின்னர், அனுமதிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் ரூபாய் நோட்டுக்களை டெபாசிட்டாக ஆக்சிஸ் வங்கி ஏற்க மறுத்ததாக டெல்லியை சேர்ந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் புகார் எழுப்பியது. வங்கியின் இந்த செயலால் இழப்பை சந்தித்தாக கூறி நிறுவனம் தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தது. தலைமை உறுப்பினர் எவிஎம் ஜே ராஜேந்திரா மற்றும் நீதித்துறை உறுப்பினர் அனூப் குமார் மெந்திராட்டா ஆகியோர் அடங்கிய ஆணையம் இந்த வழக்கை விசாரித்தது.
மார்ச் 10ம் தேதியிட்ட ஆணையத்தின் உத்தரவில்,‘‘பல முறை கோரிக்கைகள் இருந்தபோதிலும் புகார்தாரரை பணத்தை டெபாசிட் செய்வதற்கு வங்கி மீண்டும் மீண்டும் அனுமதி மறுத்ததால் வங்கி தனது சேவையில் தோல்வியடைந்துள்ளது. முற்றிலும் மறுத்ததால் அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை டெபாசிட் செய்வதற்கான ஒரே சட்டப்பூர்வ வாய்ப்பை புகார்தாரர் இழந்துள்ளார். வங்கி மறுத்ததால் தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுக்கள் காலாவதியான பிறகு பயனற்றதாக மாறிவிட்டதால் நிறுவனம் நேரடி மற்றும் மீளமுடியாத இழப்பை சந்தித்துள்ளது. எனவே சேவை குறைபாடு காரணமாக ஆக்சிஸ் வங்கி சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு 2016ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி முதல் பணம் செலுத்தப்படும் தேதி வரையிலான காலத்திற்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் சேர்ந்து ரூ.3.16கோடியை 2 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
