ஈரோடு, மார்ச் 13: கருவில்பாறை வலசு பூங்கா சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சி 3ம் மண்டலத்திற்கு உட்பட்ட கருவில்பாறை வலசு பகுதியில் 26.65 ஏக்கர் பரப்பளவில் கருவில்பாறைவலசு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீரும், மழை நீரும் சேகரமாகும். குளத்தினை சுற்றி சுமார் 2 கிலோ மீட்டருக்கு நடைபாதை மற்றும் குளத்திற்கு அருகே புல்வெளியுடன் கூடிய பூங்கா, குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல்கள், சறுக்கு விளையாட்டுகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் பூங்காவில் உள்ள பொருட்கள் சிதலமடைந்தும், முட்புதர்கள் நிறைந்தும் காணப்பட்டது. 15வது நிதிக்குழு மானியத்தின்பேரில் கருவில்பாறை வலசு ஏரியையும், பூங்காவையும் சீரமைக்க ரூ.7.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ஏரியை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூங்கா சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.
