பொன்னேரி: மீஞ்சூர் அருகே நேற்றிரவு கபடி போட்டியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை குடிசை வீட்டில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தூங்கியுள்ளார். அங்கு திடீர் மின்கசிவினால் அந்த குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில், வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த பள்ளி மாணவன் உடல் கருகி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மீஞ்சூர் அருகே வாயலூர் ஊராட்சியில் ஊரணம்பேடு கிராமம், விநாயகர் கோயில் தெருவில் வசிக்கும் முனுசாமி-மாலதி தம்பதியின் மகன் சீனிவாசன் (15). இவர், திருவெள்ளைவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது உறவினரின் வீட்டுக்கு முனுசாமியும் மாலதியும் சென்றிருந்தனர். பின்னர் நேற்றிரவு செங்கழுநீர்மேடு கிராமத்தில் நடைபெற்ற கப போட்டியை பார்ப்பதற்கு பள்ளி மாணவன் சீனிவாசன் சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்றிரவு முழுவதும் கபடி போட்டியை பார்த்துவிட்டு, இன்று அதிகாலை தனது குடிசை வீட்டுக்கு வந்து பள்ளி மாணவர் சீனிவாசன் தூங்கியுள்ளார். அப்போது திடீர் மின்கசிவு காரணமாக அந்த குடிசை வீடு முழுமையாக தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததில் சாம்பலானது. இவ்விபத்தில், குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்த பள்ளி மாணவர் சீனிவாசன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் காட்டூர் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். தீப்பிடித்த குடிசை வீட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதில், அந்த வீட்டுக்குள் இருந்த ரேஷன் கார்டு உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாகிவிட்டன.
மேலும், வீட்டுக்குள் தீயில் சிக்கி பலியான பள்ளி மாணவர் சீனிவாசனின் சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அச்சடலத்தை போலீசார் கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக குடிசை வீட்டு தீப்பிடித்து எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில் இறந்துபோன பள்ளி மாணவர் சீனிவாசன், வரும் 11ம் தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத தயார்நிலையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
