தூத்துக்குடி: தூத்துக்குடி, கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மினி கிளினிக் அமைக்க துணை சுகாதார மையங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிடவேண்டும், மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களை பள்ளி தடுப்பூசி பணியில் இருந்து விடுவிக்கவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாப்பிள்ளையூரணியிலுள்ள தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன் சாந்தகுமாரி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலெட்சுமி, மாவட்ட செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச்செயலாளர் நிர்மலாமேரி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.