நன்றி குங்குமம் டாக்டர்
வெந்தயத்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த தண்ணீரில் தலைமுடியை அலசிவந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேங்காய் எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து, அதனை தலையில் நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியபின் நன்கு அலசிட, நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
கறிவேப்பிலையை மோர் கலந்து, மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி, அதனை முடியின் வேர்களில் நன்கு தடவி அரைமணி நேரம் ஊறியபின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதை வாரமிருமுறை செய்து வர நரைமுடி வராமல் தடுக்கலாம். இளநரை இருந்தால் மறைய ஆரம்பிக்கும்.நெல்லிக்காய்ப் பொடி, தான்றிக்காய்ப் பொடி, மருதாணிப்பொடி, கறிவேப்பிலைப் பொடி, கரிசிலாங்கண்ணிப் பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப்பொடி இவற்றை தலா 10 கிராம் எடுத்து 1 லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து இக்கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்கவும். பின்பு வெள்ளைத்துணியில் வடிகட்டவும். குளிக்கும்முன் இதை தலையில் தேய்த்து சற்று நேரம் கழித்து குளித்துவிட இளநரை மறைந்து, முடி கருமையாக வளரத் தொடங்கும்.
நெல்லிக்காயை நறுக்கி வெயிலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊறவிட்டு அந்த எண்ணெய்யை இலேசாக சூடேற்றி, தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து வந்தால் நரைமுடி மறையத் தொடங்கும்.தேங்காய் எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து, அதனை தலையில் நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியபின் நன்கு அலசிட, நரை முடி மறைந்து முடி வளர்ச்சி தூண்டப்படும்.
பூந்திக்காய், வெட்டி வேர், வெந்தயம், வேப்பிலை, ரோஜாஇதழ், ஆரஞ்சு பழத்தோல், மல்லிகைப்பூ, வெட்டிவேர், செண்பகப் பூ மொட்டு, நெல்லிக்காய் சேர்த்து 100 கிராம் எடுத்து அனைத்தையும் நன்கு காயவைத்து அரைக்கவும். 100 கிராம் பொடியை 200 மில்லிலிட்டர் தயிரில் கலக்கவும். முதலில் தலையில் சிறிது எண்ணெய் தடவிவிட்டு பின் இந்த எண்ணெயை தடவி 45 நிமிடங்கள் ஊறவிட்டு பின்னர் அலசவும்.
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்
