புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றாலும், தமிழகத்துடன் நிலப்பரப்பில் ஒன்றியிருப்பதால், தமிழகத்தில் அரசியல் தாக்கங்கள் புதுச்சேரியை பெருமளவு பாதிக்கும். தமிழகத்தின் மக்கள் நலத்திட்டங்கள் 75 சதவீதம் புதுச்சேரியில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொண்டுவரப்படும். பொங்கல், தீபாவளி பரிசுத்தொகை, இலவச அரிசி, சத்துணவு திட்டம், இலவச வேட்டி சேலை என பல்வேறு திட்டங்கள் புதுச்சேரியிலும், தமிழகத்திலும் உள்ளது.
பொங்கல் பண்டிகையின் போது முதலில் ரூ.750 மதிப்புள்ள வெல்லம், பச்சரிசி, சமையல் எண்ணெய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இது புதுச்சேரியிலும் எதிரொலித்ததது. திமுக உளிட்ட எதிர்கட்சிகளும், ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் தமிழகத்தை போல பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென ரங்கசாமி வலியுறுத்தினார். போதுமான நிதி இல்லாததால், தமிழகத்தை போலவே ரூ.3 ஆயிரம் வழங்க ஒப்புதல் அளித்தார். அதேபோல் தமிழகத்தில் 3 மாதத்துக்கான மகளிர் உரிமத்தொகை ரூ.3 ஆயிரம், கோடைக்கால சிறப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ. 5 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், புதுச்சேரி அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் அதிகரித்தது. மக்கள் தொகை அதிகம் உள்ள தமிழகத்திலேயே ரூ 5 ஆயிரம் கொடுக்கிறார்கள், புதுச்சேரியிலும் கொடுக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்தது.
இதனை தொடர்ந்து தமிழகத்தை பின்பற்றி புதுச்சேயிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தலைவிகளுக்கு இரண்டு மாதத்துக்கான உதவித்தொகையும் சேர்த்து ரூ.5 ஆயிரம் வழங்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆனால் இதனைக்கூட முதல்வரால் அறிவிக்க முடியவில்லை. துணைநிலை ஆளுநர் தனது முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்ட பிறகே தெரியவந்தது. எது எப்படியோ தமிழகத்தின் நலத்திட்டங்களை காப்பியடித்தாவது மக்களுக்கு நல்லது நடக்கிறதே என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
