- கமல்
- மக்கள் முதலமைச்சரின் மனிதநேய விழா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- வேப்பேரி பெரியார் திடல்
- கமல்ஹாசன்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவான, மக்கள் முதல்வரின் மனிதநேய விழா, வேப்பேரி பெரியார் திடலில் நடந்தது. அப்போது, கமல்ஹாசன் பேசியதாவது: திமுக ஆட்சி அடுத்த முறையும் வரவேண்டும் என்பது ஆசை அல்ல; தேவை. இதற்காகப் பிரார்த்தனை செய்வதில் அர்த்தம் இல்லை, வேலை செய்ய வேண்டும். திமுக 70 வருடமாகச் செய்கிறது. மக்கள் நீதி மய்யத்திற்கு 9 வயது தான் ஆகிறது. அதனால், திமுகவை பார்த்துக் காப்பி அடியுங்கள், பாஸ் ஆகிவிடுவீர்கள். தமிழ் இனத்தின் குரல் டெல்லிக்கு கேட்கத் தொடங்கிவிட்டது. அண்ணா போட்ட குரலில் நடுவில் கொஞ்சம் தொய்வு இருந்தது.
இனி தெற்கு தேயவே தேயாது, தேயவும் விடமாட்டோம். தேசிய தலைவரை அரசியல் களம் காண வைக்கப்போகிறோம் நாம் என்பதை மறந்துவிடாதீர்கள். தேசத்தின் நலன் கருதி தான், இந்த கூட்டணியில் சேர்ந்தோம். திராவிடம் நாடு தழுவியது. அதற்கான சான்றுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இது திராவிடர்களின் போராட்டம். அதன் நாயகன் மு.க.ஸ்டாலின். அவருக்கு தோள் கொடுக்க வேண்டியது தமிழனின், இந்தியனின் கடமை. நான் இரண்டும்தான். நாளை நமதாக வேண்டும். இன்னும் நூறு வருடங்கள் திராவிடம் பெருக வேண்டும். முதல்வரை வாழ்த்தும் ஒரு எம்பியாக நான் நினைக்கவில்லை; அண்ணணை வாழ்த்தும் ஒரு தம்பியாக நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
* முத்தரையர் சமூகத்தை ஏமாற்றியவர் எடப்பாடி…. அங்கீகாரம் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்… செல்வகுமார் உருக்கம்
திருச்சி திருவானைக்காவலில் தமிழர் தேசம் கட்சி சார்பில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் மற்றும் தலைவர் செல்வகுமார் பேசியதாவது: முத்தரையர் சமூகம், பட்டயம் எழுதி கொடுத்தது போல் இரட்டை இலைக்கு மட்டுமே வாக்களித்து வந்தது. வாக்களித்த சமூகத்தை அதிமுகவினர் வாழ வைக்கவில்லை. எடப்பாடியை முதல்வராக்கி அழகு பார்த்த முத்தரையர் சமூகத்தை உதாசீனப்படுத்தினர், கேவலப்படுத்தினர், ஏமாற்றி விட்டனர்.
அதனுடைய விளைவு தான் இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முத்தரையர் சமூகத்தை அழைத்து நமக்கான அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறார். ஒரு தொகுதி கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறார். திமுக கூட்டணியில் நம்மை சேர்த்து கொண்டது கூடுதல் பலம் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். 200 தொகுதிகளில் மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்வர் சூளுரைத்து வருகிறார். நாம் திமுகவில் சேர்ந்ததால் கூடுதல் தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிப்போடும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
