ஓசூர், பிப்.9: ஓசூர் வனப்பகுதியில், யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பனிக்காலம் முடிய உள்ளதால் வனத்துறையினர் இப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி, சானமாவு, கெலமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதி மற்றும் கர்நாடக வனப்பகுதியையொட்டி 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. கடந்த மாதங்களில் மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால், வனப்பகுதி யாவும் மரங்கள், செடிகள் வளர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. மேலும் அனைத்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. நீர்வளம் நன்றாக உள்ளதால், விவசாய பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. இந்நிலையில், பனிக்காலம் முடியும் தருவாயில் உள்ளதால், வனப்பகுதியில் வறண்ட வானிலை நில வாய்ப்பு உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் முகாமிட்டுள்ள யானைகள் அதிகாலையில் கிராமங்களில் நுழைய வாய்ப்புள்ளது.