இலுப்பூர், பிப்.27: இலுப்பூர் கண்ணாரத்தெருவில் அமைந்துள்ள காளிகாபரமேஷ்வரி அம்மன் கோயில்திருவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இலுப்பூர் கண்ணாரத்தெருவில் மகாகணபதி காளிகா பரமேஷ்வரிஅம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் மாசி திருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிறது. துவங்கிய நாள் முதல் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் பெற்றன. விழாவின் முக்கிய விழாவான திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பக்தர்கள் கரகம் பாலித்து இலுப்பூர் தேரோடும் திருவீதி வலம் வந்து அம்மனை வழங்கினர். 10 மணிக்கு இலுப்பூர் மேலப்பட்டி அம்மன்கோவிலில் இருந்து பால்குடம், முளைப்பரி எடுத்து வந்து பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு கணபதி சிறப்பு அலங்காரத்தில் இலுப்பூர் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை விழாகுழுவினர் செய்திருந்தனர்.
