கடலூர், பிப். 26: கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2024ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேலை பார்த்து கொண்டிருந்த திருக்கோவிலூரை சேர்ந்த தண்டபாணி மகன் கார்த்திக் சாம் என்பவர், கத்தார் நாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னுடன் வேலை பார்த்த சசிதரன் என்பவரிடம் முதலில் பேசியுள்ளார். தொடர்ந்து கத்தார் நாட்டிற்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதாகக் கூறி கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை, சங்கிலிக்குப்பம், சிதம்பரம், புவனகிரி விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு, இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இதன் மூலம் அவர் சுமார் ரூ.25 லட்சம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப கேட்டால் முறையாக பதில் அளிக்காமலும் கார்த்திக் சாம் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், வெளிநாட்டு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி பணம் கொடுத்தோம். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. பணமும் திரும்ப வரவில்லை. ஏமாற்றிய நபரை தொடர்பு கொண்டால் எங்களது செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்துவிட்டார். சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து பணத்தை மீட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
