திண்டுக்கல், பிப்.25: திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று, கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன், சம்மேளன மாநில குழு உறுப்பினர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சிவாஜி கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019 தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது, அரசு பொது மருத்துவமனைகளில் ஆட்டோவுக்கு பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும், நலவாரிய நிதியை பயன்படுத்தி அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்,
13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நல வாரியம் மூலம் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
